Sunday, July 24

அடுத்தவர்களுக்காக உழைத்தது போதும்; இனி நமக்காக உழைப்‌போம் : எஸ்.ஏ...!

இதுநாள் வரை அடுத்தவர்களுக்காக நாம் உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்து போனது போதும். இன‌ிமேலாவது நாம் நமக்காக உழைத்து வாழ்வில் முன்னேற பாடுபடுவோம் என்று இயக்குநரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து, அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் இப்போதே தொடங்கிட்டன. இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பிலும், இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேலைகள் நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்மன்றத்தில் உள்ளவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் எஸ்.ஏ.சி.,

அதன்படி வேலூர் மாவட்டம், விருபாட்சிபுரத்தில் விஜய்யின் மக்கள் இயக்க ஆலோசனை நடந்தது. அதில் பேசிய எஸ்.ஏ.சிந்திரசேகர், ஜெயலலிதா அவர்களின் ஆட்சி அமையவேண்டும் என்று விஜய் விரும்பினார். அதை நான் உங்களுக்கு சொன்னேன். அதன்படியே அதிமுக., வெற்றிக்கு நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாடுபட்டார். அதற்கு நல்ல பலனாக அதிமுக.,வும் அமோக வெற்றி பெற்று, முதல்வராக ஜெயலலிதாவும் பதவியேற்றார். இந்த வெற்றிக்கு காரணம் நீங்கள் தான். இந்த தேர்தலில் புதிதாக ஓட்டுபோட்ட 80லட்சம் வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான்.

இதுநாள் வரை மற்றவர்களுக்காக நாம் உழைத்து வந்தோம். இனிமேலாவது நாம், நமக்காக உழைப்போம். மக்கள் இயக்கத்தில் உள்ள அனைவரும் வாழ்வில் உயர வேண்டும். அதற்கு இந்த உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பகுதியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால், நீங்கள் தேர்தலில் நிற்க, நான் உங்களுக்கு சீட் வாங்கி தருகிறேன். ஒரு உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு உறுப்பினர் வெற்றி பெற்றால் கூட, தமிழகம் முழுவதும் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 1000 பேர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

கொள்ளையடிக்கும் எண்ணத்துடன் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் அரசியல் மேடை ஏறி, மக்களுக்காக பணியாற்ற வேண்டும். இப்போதைக்கு விஜய், நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். இன்னும் கொஞ்சகாலத்திற்கு அவர் சினிமாவில் இருக்க வேண்டும். அவருக்கு பதிலாக நான் உங்களோடு இருந்து, உங்களுக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment